செம்மணிக்கு நீதி கோரிய கையெழுத்து போராட்டம்: நாளை கிழக்கில் ஆரம்பம் : மக்களை ஆதரவு வழங்க அழைப்பு
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் நாளை வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது இதில் மக்கள் ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று புதன்கிழமை (3) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன் மு.சந்திரகுமார், கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்பினை விடுத்தனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பம்
இந்த கையெழுத்து போராட்டம் கடந்த மாதம் 29 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய கிழக்கில் நாளை மட்டக்களப்பில் காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படும் அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகர் ஆர் கே.எம் வித்தியாலயத்துக்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்படும்.
அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 05ம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் சிவன்கோவிலுக்கு அருகில் ஆரம்பித்துவைக்கப்படும் இந்த கையெழுத்து போராட்டம் கிழக்கிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ந்து இடம்பெறும்.
தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை
இந்த கையெழுத்துக்கள் மூலம் தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதுடன் அவர்களின் மொழியை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக யுத்தத்தின் மூலம் தமிழ் தேசிய இனம் இருக்க கூடாது என பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது எனவே இதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதனை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுபோக வேண்டும் என்ற கடமைப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது. ஐ.நாவுக்கு அனுப்பும் இந்த கையெழுத்து போராட்டத்தில் கலந்து ஆதரவு வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அழைப்பு விடுக்கின்றோம் என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
