பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக இன்று வாழைச்சேனையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு! (படங்கள்)
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக வாழைச்சேனைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வாலிபர் முன்னணியின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமாகிய கி.சேயோன் ஒழுங்கமைப்பில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.நல்லரெட்ணம் தலைமையில் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் முன்பாக இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பலர் கலந்து கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு கையொப்பமிட்டதுடன், மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.