இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி
சிங்கள - பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டரீதியாக மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
மெல்பேர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், அவுஸ்திரலியாவின் பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும் இணைந்திருந்த போதிலும் பெரும்பாலும் சிங்கள மக்களின் போராட்டமாகவே அவை முன்னெடுக்கப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மக்களுக்கான பாரிய பொறுப்பு
அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போதே உலகம் முழுவதும் பெருவாரியான சிங்கள மக்களும் வாழ்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொண்டார்கள் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு இன்று பாரிய பொறுப்பொன்று உள்ளது என கூறியுள்ள அவர், அவுஸ்திரேலிய அரசாங்கமே முன்வந்து, சிங்கள மொழி கலாசாரம் உட்பட சுமார் 68 மொழி கலாசாரங்களை வளர்த்து விடுகிறது என சுட்டிக்காட்டினார்.
அவுஸ்திரேலியாவில் பன்மொழி, பல்லின, பன்மத கலாசாரம் ஒரு சுமையாக கருதப்படாமல், சாதகமாக கொண்டாடப்படுவதுடன், அது அரசாங்க கொள்கையாகவே முன்னெடுக்கப்படுகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள தலைவர்களுக்கு எடுத்துச் செல்லுதல்
இந்த பன்மைத்துவ செய்தியை இலங்கையின் சிங்கள தலைவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள் எனவும் அது உங்கள் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து இலங்கை, ஒரு பன்மைத்துவ நாடு என்ற நிலைமைக்கு சட்டரீதியாக மாற வேண்டும் எனவும் இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக உதவுங்கள் எனவும் மனோ கணேசன் சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறும் போதே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சியை பெற முடியும் எனவும் இதுபற்றிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் சிங்கள இலங்கையர்களிடம் இருக்கிறது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.