தமிழ் எம்.பியின் கோரிக்கையால் சிங்கள குடியேற்றங்கள் உருவெடுக்கும் அபாயம்
சிறிலங்கா அரசின் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை எனவும் மாறாக தழிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழிற்சாலையை சுற்றி சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ள நிலையில், அவரது கருத்து தொடர்பிலும் பதில் வழங்கியுள்ளார்.
“மதவெறியினுடைய உச்சபட்சக் கருத்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இந்தக் கருத்தை ஆக்ரோஷமான வகையிலேயே எங்கள் மீது வீசியிருக்கிறார்.
தென்னிலங்கையிலே அவர் ஒரு கோமாளியாக அரசியலில் கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார். தன்னுடைய தொகுதி மக்களே அவரை நிராகரித்த விடயங்களும் இருக்கின்றன.
இப்பொழுது அவர் எந்தக் கட்சியில் அங்கம் வகிக்கின்றார் என்றே தெரியாத நிலை இருக்கிறது.
இவ்வான நிலையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கட்டும் விகாரைகளுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் அல்லது கட்டுபவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால் தலையை வெட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.
நான் மேர்வின் சில்வாவிற்கு கூறுகின்ற விடயம், உங்களது சண்டித்தனத்தை களனியில் வைத்திருங்கள்.
முடியும் என்றால், வாளை எடுத்துக்கொண்டு வடக்கு கிழக்கிற்கு வந்து பாருங்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்றால், உங்களை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் - உங்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும் என்பது வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழர்களுக்கு தெரியும்” என்றார்.