மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி
மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) போல ஒரு தலைவரை நாங்கள் திரும்ப பெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ( S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவு பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “2001 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த ஒற்றுமையை, 2010 இல் இருந்து அதற்கு பின்னர் ஓரளவுக்கு பேணியதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு.
அரசாங்க அதிபர்
என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததும் அண்ணன் மாவை சேனாதிராஜாவே அந்த நேரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இராசநாயகத்தை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சித்தோம்.
சில காரணங்களுக்காக அவர் விலகியதால் வைத்தியர் சத்தியமூர்த்தி, அரியரட்ணம் மற்றும் தர்மரட்ணம் இப்படி சிலரை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சித்தும் அது பலனளிக்காமல் போகவே நான் அரசியலுக்குள் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மாகாண சபை தேர்தல் காலத்தில் நாங்கள் அவரிடம் பேசுகின்ற போது அவர் எம்மிடம் இனம் முக்கியம், இனத்துக்காக பாடுபட வேண்டும், அதற்காக நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டும் என்றார்.
பாரிய இழப்பு
அவரது இழப்பென்பது தமிழ் மக்களை பொருத்தவரை ஒரு பாரிய இழப்பு, அவர் தமிழ் தேசிய இனத்திற்கு கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர்.
தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு சென்றவர் அண்ணன் மாவை சேனாதிராஜா, நிறைய பேரால் பேசப்பட்டவராகவும் அல்லது விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
அனைத்தையும் பொறுத்து இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர், ஒருமுறை அவர் இறந்து விட்டார் என ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினர் அவரை தூக்கி வீசி விட்டு சென்றார்கள்.
சமநிலை மாற்றம்
அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வந்தது என்பது அபூர்வம் அதேபோல அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர்காவற்துறை - தம்பாட்டிக்கு சென்ற போது அங்கு வைத்து ஈ.பி.டி.பியினரால் அவரது மண்டை பிளக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் தான் அவரது உடலில் ஒரு சமநிலை மாற்றம் ஏற்பட்டது, அவரது வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய சரித்திரம், எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது.
இப்படியான ஒரு நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர், மனோரீதியாக அவரை பாதிப்படையை செய்தவர்கள் பலர் ஆனால் வரலாறு அவர்களுக்கு அந்த தண்டனையை திருப்பி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.
இயற்கையும் வரலாறும் தண்டனையை வழங்கும், அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, நாங்கள் செய்வது உமக்கு என்பது ஒரு உலக நியதியும் விதியம் கூட, நல்லது செய்தால் நல்லது கிடைக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
