இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்
மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போதைய பணவீக்கம் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக, இந்த மாத இறுதியில் மத்திய வங்கி எடுக்கவுள்ள நாணயக் கொள்கை முடிவுகள் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் இவ்வாறு கடன் பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய நிதியியல் விபரங்களில், மார்ச் மாதத்தில் மாத்திரம் வணிக வங்கிகள் தனியார் துறைக்கு 258.4 பில்லியன் ரூபாய் கடன்களை வழங்கியுள்ளன. இது பெப்ரவரி மாதத்தில் பதிவான 144.4 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு உயர்வாகும்.
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
கடந்த ஆண்டு (2025) நவம்பரில் பதிவான 262.6 பில்லியன் ரூபாய் என்ற வரலாற்றின் உச்சக்கட்ட மாதாந்தப் பதிவுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் தனியார் துறைக்கான கடன் விரிவாக்கம் 485.4 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.1 வீதம் அதிகரிப்பாகும்.

பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பித்த ஈரானியப் போர், உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மீதும் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.
இலங்கையின் பணவீக்கம் எதிர்பாராத வேகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வட்டி விகிதங்கள் குறைவு
வணிகக் கடன்களுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் 'முதன்மை கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம்' போர் தொடங்கியதிலிருந்து 44 புள்ளிகளால் அதிகரித்து 9.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை 330 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இது இறக்குமதிச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் பூகோள அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் வாடிக்கையாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்கலாம் என்பதால், வங்கிகள் சாத்தியமான கடன் இழப்புகளுக்கு எதிரான ஏற்பாடுகளை அதிகரித்துள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையால், வரலாற்றிலேயே அதிகூடிய அளவாக 2 ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான கடன்களைத் தனியார் துறை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |