'கட்டார் செரிட்டி' மீதான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் 'கட்டார் செரிட்டி' எனப்படும் கட்டார் அறக்கட்டளை நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கஞ்சன, நேற்று மாலை கட்டார் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
'கட்டார் செரிட்டி' மீதான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு
Met the Officials of the Qatar Charity yesterday. Conveyed the message that the Defense Ministry has informed the Attorney General its decision to lift the ban on the fund which was imposed in 2019. Discussed the Charity’s work in SL and globally. pic.twitter.com/tHzv7HduLV
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 30, 2022
2019 ஆம் ஆண்டு கட்டார் செரிட்டி என்ற குறித்த தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது கஞ்சன விஜேசேகர குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு தொடர்பில் 'கட்டார் செரிட்டி' நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக இலங்கை பெயரிட்டிருந்தது.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு குறித்த தொண்டு நிறுவனம் நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதேவேளை, கட்டார் செரிட்டியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தமை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அவரைக் குற்றம் சாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியிருந்தார்.
கட்டார் செரிட்டிக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளதுடன், அங்கு பணியாற்றிய உள்நாட்டு சேவையாளர்களும் உள்ளனர்.
அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு
மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட்டாலும், அதன் சேவையாளர்கள் எவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு கொழும்பில் 'கட்டார் செரிட்டி' தொண்டு நிறுவனத்தின் இலங்கை அலுவலக திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து, சஜித் பிரேமதாச பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.