புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் விடுத்த விசேட காணொலியிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “நாடு பேரிடரை சந்தித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உதவியைவழங்க முன்வர வேண்டும்.
பணத்தை நேரடியாக மாற்றலாம்
இதற்காக நாங்கள் ஏற்கனவே சில வழிமுறைகளைத் தயாரித்துள்ளோம். நிதி ரீதியாக உதவ விரும்பினால் மத்திய வங்கி வெளியிட்ட கணக்குகளுக்கு வழங்கலாம்.

இலங்கை வங்கியின் ஒரு கணக்கு இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குக்கு எந்த நாட்டிலிருந்தும் எந்த நாணயத்திலும் பணத்தை நாட்டுக்கு அனுப்ப முடியும்.
தற்போது வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்துக்கு நேரடியாகச் சென்றும் கூட பணம் வழங்கலாம்.
அவ்வாறு பணம் வழங்கும் போது அதற்கான பற்றுச்சீட்டை தூதரகம் வழங்கும். ஒன்லைன் முறையிலும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை நேரடியாக மாற்றலாம்.
நிதியுதவி மற்றும் பொருள் உதவி
மருந்துகள் தவிர்த்து, குறிப்பாக உலருணவு பொருட்கள், பேரிடரின் போது தேவைப்படும் மற்ற அத்தியாவசியப் பொருட்களாக உதவி செய்ய விரும்பினால் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டிலிருந்து உங்களை ஒழுங்கமைத்து கொண்டு அவற்றை இலங்கைக்கு அனுப்பலாம். தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயம் மூலம் மேலும் தகவல்களைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

எனவே, இந்த நேரத்தில் எங்களால் முடியும் என்று நம்பி உங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவிகளை வழங்குமாறு நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பேரிடர் நேரத்தில் நீங்கள் எந்த நாட்டில் வேலை செய்தாலும் அல்லது வாழ்ந்தாலும் உங்கள் தாயகத்தின் மக்கள் துயரத்தில் இருக்கும் போது உங்களால் முடிந்தளவு நிதியுதவி மற்றும் பொருள் உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |