எரிசக்தி துறையின் முதலீட்டிற்காக ஈரானுடன் கைகோர்க்கும் இலங்கை!
இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (06) தெரிவித்தார்.
இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் (06) அலரிமாளிகையில் இருவருக்கிடையேயும் இடம்பெற்ற உரையாடலின் போதே இந்த விடயத்தினை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு
இதன் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவின் பிரதானி கே சொஹைல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பழங்காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் நெருக்கமான சமூக கலாச்சார உறவுகள் பின்பற்றப்பட்டு வருவதாக ஈரானின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தான் பதவி வகிக்கும் காலப்பகுதியில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாடுபடுவேன் எனவும் உறுதியளித்திருந்தார்.
அபிவிருத்திப் பணிகளுக்காக
இதற்கு பதிலளித்த பிரதமர், எரிசக்தி துறை, விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஈரானுக்கு தற்போது உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கும், அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காகவும் ஈரானுக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்