சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக ஜனாதிபதி மாளிகைகள்...! அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காகக் குத்தகைக்கு விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை
பெந்தோட்ட, கதரகம, மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளே இவ்வாறு சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக வழங்கப்படவுள்ளன.

இவை முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காகவும் ஓய்வு நேரப் பயணங்களுக்காகவும் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.
தற்போதைய ஜனாதிபதியினால் இந்த மாளிகைகள் பயன்படுத்தப்படாத போதிலும், உயர் கட்டிடக்கலை மற்றும் பொருளாதார மதிப்புடைய இச்சொத்துக்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த ஏனைய செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகத் தொடர்ந்து பெருமளவிலான அரச நிதி செலவிடப்பட்டு வருகின்றது.
சொந்தமான பங்களாக்கள்
இந்தநிலையில் அரசுக்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஓய்வு விடுதிகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இம்மாளிகைகளின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவற்றைச் சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |