ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விவகாரம் - பிரித்தானிய காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவரை தெடர்ந்தும் விசாரித்து வருவதாக பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கடந்த ஆண்டு, 49 வயதான நபர் ஒருவர் பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணை
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நோர்த்தம்டன்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை உள்ளடக்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மெட்ரோபொலிடன் காவல்துறையினரை கோடிட்டு நொதம்டன்ஷயர் டெலிகிராப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செய்தியாளர் நிமலராஜன், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொல்லப்பட்டதோடு, துப்பாக்கிதாரிகளால் அவரது தந்தையும் தாக்கப்பட்டிருந்தார்.
படுகொலை
அதேவேளை, வீட்டில் இருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் காயப்படுத்தினர். நிமலராஜன் நாட்டின் பொதுத் தேர்தலை சீர்குலைத்த வன்முறைகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்தார்.
தமிழ் போராளிக் குழுவொன்று மனித உரிமை மீறல்கள் மற்றும் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் 2017ஆம் ஆண்டில் நோர்த்தம்டன்ஷயர் பெருநகர காவல்துறை கொலை தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெற்று விசாரணையை ஆரம்பித்தது.
பிரித்தானிய காவல்துறையின் அறிவிப்பு
நிமலராஜன் படுகொலையின் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நோர்த்தாம்டன்ஷயரில் வசிப்பதாகக் கூறப்படுபவரின் தகவல்களின் ஆவணமும் 2020 இல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை இந்த விசாரணையில் புலனாய்வுக்கு உதவக்கூடிய, குறிப்பாக பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது வசிக்கும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்கள் எவரும் தகவல்களைக் கொண்டிருந்தால், அவற்றை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நோர்த்தம்டன்ஷயர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
