மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!
தொழிலாளியின் மகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பெயோலமன்ட் குரூப் சென் மார்கிரட் டிவிசன் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (15.05.2026) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை (14.05.2026) ரூபராணி என்பவரின் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான ஆவணங்கள் தாமதமாகியிருந்தமை குறித்து அவரது மகன் சுப்பையா நிரோசன் (37), பெயோலமன்ட் பிரிவு காரியாலயத்திற்கு சென்று காரணம் குறித்து விசாரித்துள்ளார்.
இளைஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு
இதன்போது அங்கு வந்த தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இணைந்து குறித்த இளைஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தன்னை முதலில் தோட்ட முகாமையாளர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், கீழே விழுந்த பின்னர் உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர் இணைந்து காலால் உதைத்ததாகவும் பாதிக்கப்பட்ட சுப்பையா நிரோசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காயமடைந்த அவரை தாயார் உடபுஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட தரப்பினரும் தங்களது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து உடபுஸ்ஸல்லாவ காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
காயமடைந்த சுப்பையா நிரோசன் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரில் இருவரை உடபுஸ்ஸல்லாவ காவல்துறையினர் கடந்த 14ஆம் திகதி மாலை கைது செய்தனர்.
அவர்கள் நேற்று (15.05.2026) வலப்பனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸல்லாவ காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக இன்று (16.05.2026) கந்தப்பளை உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனி காரியாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், நுவரெலியா மாவட்டம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |