அத்துமீறி நுழைந்து மிரட்டிய ரஷ்ய, சீன போர் விமானங்கள் - துரத்தியடித்த தென்கொரியா!
தென்கொரியாவின் வான் பாதுகாப்பு வலையத்திற்குள் நுழைந்த சீனா மற்றும் ரஷ்யாவின் எட்டு போர் விமானங்களை, தமது நாட்டு இராணுவம் துரத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
சீனாவின் இரண்டு போர் விமானங்களும் ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களும் தமது வான் பாதுகாப்பு வலையத்திற்குள் பிரவேசித்திருந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சீனாவின் ஏச் 6 ரக குண்டுத் தாக்குதல் விமானங்கள், ஆரம்பத்தில் தமது நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு கடற்கரையில் உள்ள கொரியா வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் பல முறை பிரவேசித்து வெளியேறியதாக தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சீன விமானங்கள் கூட்டாக பிரவேசம்
சில மணித்தியாலங்களின் பின்னர் தென் கொரியாவில் கிழக்குக் கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்யாவின் போர் விமானங்களுடன் இணைந்து மீண்டும் சீன விமானங்கள் வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் பிரவேசித்து 18 நிமிடங்கள் வரை வானில் பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன மற்றும் ரஷ்ய விமானங்கள் வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக, சாத்தியமான தந்திரோபாய நடவடிக்கைகளை செயல்படுத்த தமது இராணுவம் விமானப்படை போர் விமானங்களை அனுப்பியதாக அதிகாரி கூறியுள்ளார்.
அங்கீகரிக்காத ரஷ்யா
குறித்த விமானங்கள், தென்கொரியாவின் வான் எல்லையை மீறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய வான் பாதுகாப்பு வலையத்தை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதுடன், குறித்த வலையமானது நாட்டிற்குரிய வான் பகுதி அல்லவெனவும் அனைத்து நாடுகளும் அந்தப் பகுதியில் சஞ்சரிப்பதற்கு சுதந்திரம் உள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.