தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண ஆளுநரால் (Governor of Sri Lanka's Central Province) குறித்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதி அமைச்சர் பிரதீப்பிடம் வேண்டுகோள்
நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் (Sundaralingam Pradeep) முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்கப்படும் குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை தீபாவளிக்கு மறுதினமான 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணம்
மேலும், கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு அக்டோபர் 20 ஆம் திகதி எதிர் வரும் தீபாவளியை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் (21.10.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று (17) வெளியிடப்பட்ட கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பதில் பாடசாலை 25.10.2025 சனிக் கிழமை இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - ரொஷான்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

