யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு
எதிர்வரும் நல்லூர் திருவிழாக் காலத்தைக் கருத்திற் கொண்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை ஆகிய இடங்கள் பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் என மத வேறுபாடின்றி அனைவரும் வழிபட வேண்டிய மற்றும் பார்வையிட வேண்டிய புனித ஸ்தலங்களாகும்.
சில குறைபாடுகள்
வடக்கிற்கான தொடருந்து பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடருந்துகள் மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

சில குறைபாடுகள் இருந்தாலும் திருவிழாக் காலத்தில் மக்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்திருந்தது.
தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த (07.07.2026) அம் திகதி வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |