ஆரம்பமானது போராட்டம் - முடங்கின அரச வங்கிகள்!
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியாக இன்று இடம்பெற்றுவரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றது.
வரி அறவீட்டிற்கு எதிரான போராட்டம்
இவ்வாறான வரி அறவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு கோரியும் தொழிற்சங்க கட்டமைப்புக்களால் நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளிற்காக சென்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.
அரச வங்கிகள் மூடல்
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவின் பிரதான அரச வங்கிகளின் செயற்பாடுகளும் இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தூர இடங்களில் இருந்து வங்கிச்சேவைகளுக்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தமையை அவதானிக்க முடிந்தது.












