மர்மக்கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் துலங்கிய மர்மம்!
விமானப்படை வீரர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
நேற்றைய தினம் காலை விமானப்படையின் கோப்ரலான பீ. ரத்னசூரிய மரம் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பிரதேசவாசிகள் அது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினருக்கு அறிவித்திருந்தனர்.
அதயைடுத்து காவல்துறையினர், விமானப்படை கோப்ரலை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
அவர் கட்டப்பட்ட மரத்தில் “ முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழிலில் எழுப்பட்ட பதாகை ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் போது விடுமுறை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த தன்னை வான் ஒன்றில் வந்தவர்கள் கடத்திச் சென்று, கை, கால்களை கட்டி, மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக ரத்னசூரிய தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் கூறியவை முன்னுக்கு பின் முரணாக இருந்ததன் காரணமாக தமிழ் மொழியில் எழுப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
தீவிர விசாரணையையடுத்து வெளியான உண்மை
அதன் போது தமிழ் மொழி தொடர்பான போதிய தெளிவில்லாத ஒருவர் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை ஆரம்பித்ததையடுத்து, விமானப்படை வீரர் தானே இதனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரிடம் உண்மையான விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்,
இணையத்தள சூதாட்டத்திற்கு அடிமையானதால், முகாமில் உள்ள ஏனைய படையினரிடம் பணத்தை பெற்றுக்கொண்டேன். பணத்தை திரும்ப செலுத்த முடியாததால், முதலில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன்.
காவல்துறையினரால் கைது
எனினும் நான் தற்கொலை செய்துகொண்டால் விமானப்படையிடம் இருந்து எனது மனைவிக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்காது. இதன் காரணமாகவே இந்த திட்டத்தை செயற்படுத்தினேன் எனக் கூறியுள்ளார்.
விமானப்படை கோப்ரலை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நாளைய தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவத்துடன் விமானப்படைக்கோ, வேறு தரப்பினருக்கோ தொடர்பில்லை. முழு செயலும் கோப்ரலால், அவரது விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மூலம் விமானப்படையின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக கோப்ரலுக்கு எதிராக விமானப்படையின் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் காவல்துறையினர் அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

