அரச பயங்கரவாத்தால் நசுக்கப்படும் மக்கள் - சஜித் சீற்றம்
காரணமின்றி கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இடைக்கால வரவு - செலவுத்திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய வண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் உட்பட பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எதேச்சதிகார செயற்பாடு எதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திய வண்ணம் மக்களை எதேச்சதிகார ரீதியாக கைது செய்து வருகிறது” என்றார்.
சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவைக் கோரும் அதேவேளை, எதிர்க்கட்சி அதற்கு தயாராக இருக்கும் நிலையில், அரசாங்கம் இத்தகைய போக்கில் ஜனநாயகமற்ற மற்றும் எதேச்சதிகார செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் தாம் எவ்வாறு இதற்கு ஆதரவளிப்பது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.