குடும்ப வறுமையை போக்குவதற்கு முற்பட்ட கடற்றொழிலாளிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிச்சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர்தப்பியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போதும் நேற்று இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச்சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கடற்றொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
கடல் கொந்தழிப்பு
இந்த நிலையில் கடல் கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காணாமல்போனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி வயது 41 என்பவரே காணாமல்போயுள்ளார்.
காணமல்போனவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணமல்போனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு, கொக்குவில் காவல் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தேடுதலில் சிரமம்
கடல் சீரற்ற நிலையில் உள்ளதன் காரணமாக காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கமுடியாத நிலையுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடல் சீற்றமாகவுள்ளதனால் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையமும் மீன்பிடி திணைக்களமும் தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.