மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாத நிலை - காலையில் உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!
மட்டு. ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள குடியிருப்பு ஆற்றில், தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று இரவு தனியாக மீன் பிடிப்பதற்காக சென்றிருந்த நிலையில், இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வழமைபோல நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக ஆற்றில் தோணியில் தனியாக சென்றுள்ளார்.
இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று காலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

