எரிபொருள் நிலையத்தில் மோசடி - அதிகாரிகளின் தலையீட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகத்தில் மோசடி இடம் பெறுவதாக தெரிவித்து, போராட்டம் நடத்தப்பட்டது.
அதனையடுத்து இன்று அதிகாரிகளின் தலையீட்டின் பின்னர் மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் பம் பழுதடைந்திருந்தமையால் விநியோக நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது திருத்தப்பட்ட நிலையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்ற போதும், பொது மக்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெறவில்லை.
இரவு நேரங்களில் தனியாருக்கு விற்கப்படும் எரிபொருள்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம் பெறுகின்றதுடன் தொடர்ந்து இரவு நேரங்களில் தனிப்பட்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது என்று கூறி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து அவ்விடத்திற்குசென்ற வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போது எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை பொது மக்களுக்கு இன்று காலை காண்பிப்பதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தனர்.
அதிகாரிகளின் தலையீட்டையடுத்து விநியோகம்
இன்று காலை எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வாழைச்சேனை காவல்துறையினர், இராணுவத்தினர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆகியோர் பொது மக்களுக்கு இருப்பை காண்பித்ததன் பின்னர் பொது மக்களுக்கு பெற்றோலும் மண்ணெண்னையும் விநியோகிக்கப்பட்டது.
பெற்றோல் 271 லீற்றர் இருப்பில் 270 லீற்றர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்கமைய அறுபது லீற்றர் பெற்றோல் முந்நூறு ரூபாய் வீதம் 94 நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் மண்ணெண்ணெய் 1300 லீற்றர் இருப்பு இருந்ததுடன் அதில் ஆயிரம் லீற்றர் முந்நூறு ரூபாய் வீதம் 290 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.












