கடந்த தசாப்தங்களில் சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை பெற்ற சீனா!
சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை கடந்த தசாப்தங்களில் சீனா பெற்றுள்ளது என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் குடியரசின் 73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை மக்களின் நலனுக்காக சோதனைகள், சவால்கள் மற்றும் வெற்றிகளின் போது சீனா உண்மையான நண்பனாக இருந்து வருகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் உறுதிமொழி
தற்போதைய சூழ்நிலையிலும் கூட, சுற்றுலா மற்றும் ஏனைய துறைகளை மேம்படுத்த இலங்கையின் முதலீட்டிற்கு உதவுவதாகவும், அதன் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சீனா உறுதியளித்துள்ளது.
கலந்துரையாடல் ஊடாக எட்டப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் சிறந்த பலனைத் தரும் எனவும் எதிர்வரும் மாதங்களில் வெற்றியைப் பெறும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலக அரங்கில் சீனர்கள் உயர்மட்ட அங்கீகாரம் மற்றும் சரியான சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம் உலகளாவிய மாபெரும் அடித்தளம் அமைத்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சக்திவாய்ந்த உலகளாவிய தலைவராகவுள்ள சீனா
அரசியல், சமூக மற்றும் பொருளாதார சக்தி, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, மற்றும் விண்வெளி ஆய்வில் சீனா அதன் விரைவான மற்றும் சீரான முன்னேற்றத்தை பெற்றுவருவதற்காக கௌரவிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
உண்மையான மற்றும் சக்திவாய்ந்த உலகளாவிய தலைவராக சீனா உள்ளதாகவும் குறிப்பாக அதன் தலைமைத்துவம் மற்றும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தனது உதவிக் கரத்தை நீட்டுவதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளின் செழிப்புக்கு அது பங்களிப்பு வழங்குகின்றது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
