மற்றுமொரு இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டுள்ள மக்கள்!
சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் மாத்தறை வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களால் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மக்கள் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஆரம்பமாக கடந்த வியாழக்கிழமை இரவு கோட்டாபய வீட்டினை முற்றுகையிட்டு மக்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதனையடுத்து தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வாகனங்களின் மீதும் மக்கள் முட்டை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.