நீதவானை காத்திருக்க வைத்த சீ.ஐ.டி- கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நீதவான்!
நீதிமன்ற விசாரணை நேரம் முடிந்த பின்னர் சந்தேக நபர்களை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அழைத்துச் சென்றமை சம்பந்தமாக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டு வந்த போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு நேற்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் இதனை கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரியாகம முன்னிலையாவார் என குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து தெரிவித்தனர்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வரும் வரை வேறு வழக்கை விசாரிக்குமாறும் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கோரினர். இதன் போது கருத்து வெளியிட்ட நீதவான், “இப்படி வழக்குகளை விசாரிக்க முடியாது.
நான் பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து சென்று விடுவேன். நேற்று முன்தினம் (17) நான் பிற்பகல் 4 மணி வரை காத்திருந்தேன். பின்னர் இரவில் சந்தேக நபர்களை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு தேவையானபடி இரவு 10, 12 மணிக்கு வழக்கு விசாரணைகள் நடத்தப்படுவதில்லை.
குற்றவியல் விசாரணை திணைக்களம் நேரத்திற்கு வேலை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் வரும் வரை வழக்கு விசாரணைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.