கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் - தரமிறக்கப்படும் சிறிலங்காவின் அந்தஸ்து! வெளியான அறிவிப்பு
இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், நிதி உதவிகள், கடன்கள் மற்றும் சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடு, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும், உலக வங்கியின் சலுகை நிதியைப் பெறும் நோக்கில் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இலங்கை தற்போது வளர்ந்து வரும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை, கடந்த 2020 ஆம் ஆண்டு குறைந்த நடுத்தர வருமானம் கொண்டு நாடு என்ற வகைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில் உயர் நடுத்தர வருமான வகைக்கு உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.