முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியான பரிதாபம்!
கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் போடப்பட்டிருந்த சேலையில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக ஹைபொரஸ்ட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாய் வெளியில் சென்றிருந்ததாகவும், சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த போதே இவ்வாறு இடம்பெற்றதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
பின்னர் வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலையை அப்புறுப்படுத்திய அயலவர்கள், சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

