திவாலாகும் இலங்கை!! ரணில் வகுத்துள்ள புதிய திட்டம்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களைக் கண்டறிவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழியவுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள், எரிவாயு மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாடு திவாலாகும் நிலைமையில் உள்ளது.
இது குறித்து விசாரிப்பதற்கு அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவை விட சர்வகட்சி தெரிவுக்குழுவை நியமிக்கும் முன்மொழிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
மக்களின் துன்பங்களுக்கு வழிவகுத்த பொருளாதார நிலைமைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் தாமதமானதற்கான காரணங்கள் குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இரண்டு வெளிநாட்டுக் கடன்களை உரிய தவணைக்காலத்திற்குள் செலுத்துவதற்கு கடந்த புதன்கிழமை இலங்கை முதல் முறையாக தவறியிருந்தது.
இந்த நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களைக் கண்டறிவதற்கான தெரிவுக்குழுவிற்கான வழிமுறைகளை வகுப்பதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல "செலுத்தப்படாத கொடுப்பனவுகள்" இருப்பதாகவும், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய கப்பல்கள் தங்கள் பொருட்களை இறக்காமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.