இலங்கையர்களுக்கு அபாயச் சங்கு..!! கையை விரித்த மத்திய வங்கி
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி
வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாதெனவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்குமென்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு சகல மக்களும் முகங்கொடுக்க நேரிடுமென இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “உள்நாட்டு வளங்கள் பற்றாக்குறைகள், அதிகரித்த உலகளாவிய பண்டங்களின் விலைகள், ஆண்டின் இதுவரை காலப்பகுதியிலும் அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் பாரியளவிலான வீழ்ச்சி என்பவற்றுடன் இணைந்ததான ஏனைய பொருளாதார அழுத்தங்களின் விளைவாக அண்மைய காலத்தில் நாட்டில் பாரிய அளவிலான பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த நிலை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
நிலைமையை சமாளிப்பது எப்படி
பல்வேறு முன்னணிக் குறிகாட்டிகளாலும் பிரதிபலிக்கப்பட்டவாறு தற்போது இடம்பெறுகின்ற பற்றாக்குறைகள், வலுசக்தி தொடர்புபட்ட சிக்கல்கள் மற்றும் சமூக ரீதியான பதட்டகரமான நிலை காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த நிலைமையை சமாளிக்க மேலும் சில காலம் தேவைப்படும். இவ்வாறான நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்கவும் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது” என்றார்.