நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்
21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரச தலைவரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் 21 ஆவது திருத்தம் உருவாக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என சுட்டிகாட்டினார்.
சமகால அரசியல் நிலைவரம்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். என நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன நிலையில்,
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே காணப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரின் அதிகாரங்கள் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அல்லது மட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட நிலையில் 21ஆவது திருத்தத்தில் அரச தலைவரின் அதிகாரங்கள் மட்டுப்பபடுத்தப்படவில்லை. முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை
அரச தலைவர் கோட்டபய ராஜபக்சவையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை கட்சியின் கொள்கை ரீதியில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக அரச தலைவர் முழுமையாக பாதுகாக்கப்பட்டு எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் அரச தலைவருக்கு அதிகார ரீதியில் வரையறைகளை விதிப்பதில் 21ஆவது திருச்சட்டமூல வரைபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிருப்தி அளிக்கும் ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.
மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என்றார்.