நாடளாவிய ரீதியில் மீண்டும் அதிகரிக்கவுள்ள விலையேற்றம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினையால், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன சந்தைக்கு கிடைக்கும் அளவு குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், புரதச் சத்து குறைப்பாடு ஏற்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் போக்குவரத்து பிரச்சினை காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கை விலங்குணவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையில் பிரச்சினை
அதேவேளை விலங்குணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முட்டை விலை அதிகரிப்பு
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள சிறு குழந்தைகளில் சுமார் 30 சதவீதமானோர் புரதச் சத்து குறைப்பாட்டுடன் உள்ளனர். கிராமப்புறங்களில் இந்த நிலைமை இதைவிடவும் மோசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விலை அதிகரிப்பு காரணமாக, நுகர்வோரின் கேள்விக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
