சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் படுகொலை விவகாரம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கடந்த 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை நிரபராதிகள் எனக் கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா காவல்துறை அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாகரன் (மோரிஸ்) ஆகியோரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெலிவேரிய மைதானத்திற்கு அருகில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேரைக் கொலை செய்தமை, மேலும் 84 பேரைக் கொலை செய்யவதற்கு சதி முயற்சி செய்தமை உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளின் கீழ், மேற்படி இரு சந்தேகநபர்கள் மீது கம்பஹா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
நிரபராதிகளாகக் கருதி விடுதலை
இவ்வாறான நிலையிலேயே இந்த வழக்கு கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்த நீதிபதி சஹான் மாபா பண்டார, சந்தேக நபர்களை குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரியவில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
சந்தேக நபராக கைது
அவர் படுகொலை செய்யப்படும் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்து 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, அப்போதைய கம்பஹா காவல்துறை அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

