கோட்டாபயவை கைது செய்ய விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவி காலம் முடிவடைந்ததன் பின்னர் கௌரவமாக ஓய்வு பெற்ற அதிபரல்ல எனவும் அவ்வாறான ஒருவருக்கு ஆடம்பர வாழ்க்கையையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்க கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு அரச உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரச செலவில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
நாட்டை அழித்த நபருக்கு பாதுகாப்பு வழங்குவது சரியா?

ஒரு பிரஜையாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு மீண்டும் வருவது ஒரு பிரச்சனையல்ல எனவும் நாட்டை அழித்த ஒரு அதிபருக்கு சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான பாதுகாப்பை வழங்கி அரசாங்க பணத்தை செலவு செய்வது எவ்வாறு சரியாகும்?
சிறிலங்கா அதிபரான ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாராலும் முன்னாள் அதிபருக்கு இவ்வாறு ஆதரவளிக்க முடியாது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வரும் போது 60 ரூபாவாக இருந்த பாண் தற்போது 300 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.
மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இவ்வாறாக பொருட்களின் விலை எதிர்பாராத அளவில் உயர்வடைந்ததற்கான முழு பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும்.
கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்காது, அதிபர் ரணில் விக்ரமசிங்க, மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.