நாடளாவிய ரீதியில் மூடப்படுகிறது ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
நாடளாவிய ரீதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளைய தினம் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாளைய தினம் பாரிய போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடுவதற்கு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையம் மூடப்படுகிறது
அதற்கமைய நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஓசி எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் நாளை மூட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பவர்களுக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகின்றது. இதேவேளை நாளை பாரிய போராட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாகவே மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குகின்றது. எனினும் ஐஓசி நிறுவனம் மட்டுமே தற்போது அனைவருக்கும் எரிபொருளை வழங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.