காலி போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை - தென்னிலங்கையில் குழப்பம்!
பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் பகல் ஒரு மணிக்குள் கூடாரங்களை அகற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையினரால் கைது
இதேவேளை குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து தற்போது போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.