காலி போராட்டக்காரர்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் போராட்டக் களத்திற்கு நேற்றைய தினம் மீண்டும் சென்ற கோட்டை காவல்துறையினர் காலிமுகத்திடலை விட்டு வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.
வன்முறையை ஏற்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும்
அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்கள் வன்முறையை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை காவல்துறையினர் தங்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டக் களத்திலிருந்து வெளியேறிய குழுவினர்
பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினரின் அறிவிப்பிற்கு இணங்கி நேற்று ஒரு குழுவினர் போராட்டப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும் வேறு சில தரப்பினர் அந்த இடத்தை விட்டு எந்த வகையிலும் வெளியேற மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
