போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ள காலி முகத்திடல்!
அவசரகால நிலையை நீடிக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு செய்யாதவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவோராக கருதப்படுவர் எனவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதி போராட்டக்காரர்களுக்கு பின்னால் ஒழிந்துகொண்டு இந்த போராட்டத்தை பாதாள உலக குழுவினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமே முன்னெடுக்கின்றனர் எனவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை வீட்டிற்கு அனுப்புவதே நோக்கம்
'கோட்டா கோ ஹோம்' அதாவது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர் பதவி விலகி அரசியலமைப்பின்படி புதிய அதிபரும் தெரிவு செய்யப்பட்டார்.
எனினும், அவர்களது நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் தொடர்கிறது. இது நியாயமற்றது. நாட்டை சீர்குலைத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் இடமாக அது இருக்கக்கூடாது.
இதற்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கினர்.
அதனூடாக அவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.
போராட்டக்காரர்கள் என்று கூறுபவர்கள், அதிபர் மாளிகையின் வேலிகளை திருடினர்.
அதிபர் செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்தினர். இவர்களா இந்த நாட்டை கட்டியெழுப்பப் போகிறார்கள்? தற்போது, கோட்டாபயவின் பெயரை நீக்கி வேறுசிலரை துரத்துவதற்கு போராட்டம் நடக்கிறது.
வாக்குகளால் அன்றி கலகத்தினால் ஆட்சிக்கு வரும் முயற்சி
துறைமுகம், உயர்தர சுற்றுலா விடுதிகள், துறைமுக நகர் போன்ற பொருளாதார கேந்திரங்கள் அமைந்துள்ள இடத்தை அண்டி போராட்டம் நடத்தப்படுவதால் நாளைய முதலீடுகளை அது பாதிக்கக்கூடும்.
வாக்குகளால் அதிகாரத்துக்கு வரமுடியாது என அறிந்துள்ள சில அரசியல்வாதிகள் கலகத்தினால் ஆட்சிக்குவர முயற்சிக்கின்றனர். இத்தகைய போராட்டங்களை பார்க்கும் வெளிநாட்டினர் முதலீட்டுக்கு தகுதியற்ற நாடாக எம்மை கணிக்கக்கூடும்.
தற்போது, உண்மை பேராட்டக்காரர்கள் விலகியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்களும், பாதாள உலகக்குழுவினருமே போராட்டத்தை வழிநடத்துகின்றனர்.
கடந்த வார சம்பவத்தின் பின்னர் சிலர் இராணுவத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர். அவர்கள் மக்களையும் எம்மையும் பாதுகாப்பதற்காகவே போராடுகின்றனர்.
இராணுவத்தினர், விடுதலைப்புலிகளுடன் போராடி தோற்கடித்தனர். எனினும், அமைதி போராட்டங்களுக்கு அவர்கள் மதிப்பளித்தனர். இறுதியில் மிகவும் கேவலமாக அவர்களை போராட்டக்காரர்கள் நடத்தினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
