மஹிந்தவின் தலையீடு- இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தை!
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பந்தமாகவும் எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய் கிழமை நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ காஸ் மற்றும் லாஃப் காஸ் நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு வெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குழு, நுகர்வோர் அதிகார சபை, தரக்கட்டுப்பாட்டு பணியகம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் காவல்துறை பிரதானிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய் கிழமை முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகும் இந்த பேச்சுவார்த்தையில், சமையல் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணம், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரச தலைவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் முடிவுக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.