தமிழர் தாயகத்திற்கு எழுதப்படும் முடிவுரை..!
இலங்கையில் ஆயுதமோதல் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட - நன்கு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.
நீதிமன்றக் கட்டளையை மீறி தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது.
இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும், குறிப்பாக சிங்களவர்கள். பௌத்தர்கள் இயல்பாகக் குடியிருக்காத பகுதிகளில்கூட, பௌத்த மத ஆலயங்கள் சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாயாறு, தையிட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.
இவற்றுள் பெரும்பாலானவை சிறிலங்கா அரச ஆதரவோடு, தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது. உதாசீனப்படுத்தி, கட்டமைக்கப்பட்டுவரும் ஆலயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சில இடங்களில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த ஆலயங்களைச் சூழ இருக்கும் பகுதிகளில், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர்.
உண்மையில் இந்த தமிழர்களின் பாரம் பரிய புராதன அடையாள நிலமானது, சிங்கள - பௌத்த மயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறி வைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது.
மாதுருஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டம்" எனும் பெயரில் நடைமுறைப் படுத்தப்படும் திட்டமானது அந்தப்பகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.
புராதன தமிழ் சைவ வழிபாட்டிடமான வெடுக்குநாரி மலையை பௌத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன், அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.
ஆகவே, சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடு கள் சபையின் சிறப்புத் தூதுவர் ஒரு வரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்குமாறும், தமிழர் தேசமான ஈழத்தினை, சுயாட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் - என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)