நாடு முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய மற்றும் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு இணையத்தளம் மூலம் செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர் தொடர்பில் புதிய திட்டம்
இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கோட்டாபய மற்றும் ரணிலின் அறிவிப்பு
இந்நிலையில் நாடு முடக்கப்படலாம் என சமுக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, முடக்க நிலையோ ஊரங்கு சட்டமோ நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அரச தலைவரும் பிரதமரும் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதால், நாட்டை முழுமையாக மூடவோ, ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.

