சிறிலங்கா அரச நிறுவனம் ஒன்றை விற்பனை செய்யத் தயாராகும் ரணில்!
சிறிலங்கா அரச நிறுவனமான லேக் ஹவுஸிற்கான சம்பளம் மற்றும் கடனை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்காக, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய லேக் ஹவுஸ் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடத்தை விடுதி செயற்பாடு ஒன்றிற்காக, முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சினால் அதற்கான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது அல்லது கலைப்பதற்கு யோசனை
தற்போது லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி 90 வருட குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், குத்தகைக் காலமும் அடுத்த வருடத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையிலேயே அதனை விற்பனை செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், அதனை விற்பனை செய்து பெற்றுக் கொள்ளப்படும் பணத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தை கொழும்பில் வேறொரு இடத்தில் ஆரம்பிக்கவும் அல்லது அந்த நிறுவனத்தை கலைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் தாத்தாவால் நிறுவப்பட்ட நிறுவனம்
மேலும் பழமையான கட்டிடங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்த உதவுவதால், இங்கு விடுதி அமைப்பதே நோக்கம் என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிறுவுனர் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தாத்தாவான டி.ஆர். விஜேவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.