நாட்டில் மீண்டும் உயரும் வாகனங்கள் விலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே விடுத்துள்ளார்.
வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை பயன்படுத்த நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படுமானால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி
இறக்குமதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டன.
இதனடிப்படையில், வாகன இறக்குமதிக்காக சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள வங்கி நாணயக் கடிதங்களை நிதி நிறுவனங்கள் திறந்துள்ளன.
அமெரிக்க டொலர்கள்
இந்தநிலையில், மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமிட்டபடி இறக்குமதிக்குக் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வாகன இறக்குமதி விடயத்தில் தேவையற்ற பயம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி வரம்பை நீக்குவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
