குத்தகைக்கு செல்லும் மத்தள வானூர்தி நிலையம்: சீனாவின் எல்லையில் கால்பதிக்கும் இந்தியா
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகிலுள்ள மத்தள வானூர்தி நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் இந்த முடிவானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய ரீதியான நிலப்பரப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முனையும் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வானூர்தி நிலையம்,
மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானூர்தி நிலையத்தை 30 வருட கால குத்தகை அடிப்படையில் பொறுப்பேற்று நடத்துமாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம், கடந்த 2013 ஆம் ஆண்டு சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து (China's Export-Import Bank) 209 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்று பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது.

இருப்பினும், போதிய பயணிகள் போக்குவரத்து மற்றும் சர்வதேச வானூர்தி நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாததால், பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருந்து வருகிறது.
இதன் காரணமாக உலகின் மிகவும் வெறிச்சோடிய வானூர்தி நிலையம் என்ற பெயரையும் அது பெற்றுள்ளது.
நவீன போக்குவரத்து
இந்த நிலையில், பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் இந்த வானூர்தி நிலையத்தை நவீன வானூர்தி போக்குவரத்து மையமாக மாற்றியமைக்கவும் அதன் வர்த்தக மதிப்பை உயர்த்தவும் தகுதியான மூலோபாய முதலீட்டாளர்கள் வரும் ஜூன் ஒன்பதாம் திகதிக்குள் தங்களின் விருப்பப் பிரகடனங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது கட்டியெழுப்பல்-இயக்கல்-பரிமாற்ற (Build-Operate-Transfer - BOT) மாதிரியின் கீழ் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக மத்தள வானூர்தி நிலையத்திற்கு அருகிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம், கடந்த 2017 ஆம் ஆண்டில் 99 வருட குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது புதுடில்லிக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது கடந்த ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் பலமடைந்து வரும் பின்னணியில் இந்த மத்தள வானூர்தி நிலைய முதலீட்டு வாய்ப்பை இந்தியா மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தூதரக தரப்புக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்