எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால் பதற்றம்!
ஹட்டன் நகரப் பகுதி எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் எம்.ஆர். நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 3 நாட்களுக்கு பின்னர் இன்றைய தினமே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
திடீரென வரிசையை குழப்பியவர்களால் பதற்றம்
எனவே எரிபொருளைப் பெறுவதற்கு பலர் இரவு - பகலாக வரிசைகளில் காத்திருந்த நிலையில், இன்று திடீரென வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் வரிசைக்குள் புகுந்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனால் வரிசைகளில் காத்திருந்தவர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். திடீரென வரிசைக்குள் நுழைந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை ஏற்பட்டது.
காவல்துறையினர் இராணுவத்தினரின் தலையீடு
இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயமும் ஏற்பட்டது. எனினும், காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். அதனையடுத்து எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.