இந்தியாவில் இருந்து வடக்கு துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள்!
இந்தியாவின் பண்டிச்சேரி மற்றும் காரைக்கல் துறைமுகங்களில் இருந்து யாழ்ப்பாணம் காங்சேன்துறை துறைமுகத்திற்கு அத்தியவசிய பொருட்களை கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்கள், மருந்து, பால் மா, உரம் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வந்து நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கோட்டாபய மற்றும் ரணில் அனுமதி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தொடர்ந்தும் இந்த யோசனையை முன்வைத்து வந்ததுடன் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அரச தலைவரும் பிரதமரும் யோசனைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக ஆராய்ந்து தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா யாழிற்கு விஜயம்
இது சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர் அண்மையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அதனடிப்படையில், முதல் கட்டத்தின் கீழ் அத்தியவசிய பொருட்களை வடக்கு துறைமுகத்திற்கு கொண்டு வரவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

