திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம் - தற்கொலைக்கு முயன்ற தாயக அகதிகள்!
இலங்கைத் தமிழர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த முகாமில் இலங்கை, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களே தற்கொலைக்கு முயன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம்
தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முயன்ற அகதிகள்
இந்தநிலையில், சிறப்பு முகாமில் உள்ள 30 இலங்கை தமிழர்கள், அதிகளவான மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, குறித்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.