பிரதேச செயலரின் தலையீட்டால் யாழில் நிறுத்தப்பட்ட எரிவாயு விநியோகம்- கொந்தளித்த மக்கள்!
நல்லூரில் எரிவாயு விநியோகத்தை பிரதேச செயலர் தடுத்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையாலேயே குழப்பம் ஏற்பட்டது.
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக பங்கீட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதனை அறிந்து பெருமளவான மக்கள் வரிசைகளில் நின்று பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த வேளை நல்லூர் பிரதேச செயலர் திடீரென சென்று விநியோக ஏற்பாடுகளை இடைநிறுத்துங்கள் என உத்தரவிட்டு சென்றார்.
அதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சமரசப்படுத்தியுள்ளனர்.