சித்தன்கேணி பாடசாலையில் மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!
யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஆசிரியை, 14 நாட்களின் பின்னர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமி துன்புறுத்தல்
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவி கடந்த 10ஆம் திகதி அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியையால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த ஹர்ஷா ஜெயதீசன் என்ற 7 வயது மாணவியே அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது.
பிணையில் விடுதலை
இந்நிலையில், மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்தது எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதோடு, நேற்று மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
