ஊடகவியலாளர் நிமல ராஜன் படுகொலையின் 22 வது ஆண்டு நினைவுதினம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலி
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜன், பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன் அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன்போது படுகாயம் அடைந்தனர்.















