புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு - களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு!
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 600க்கும் மேற்பட்ட கைதிகளில் 653 கைதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 70 பேரை காவல்துறையினர் தேடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று அங்கு செல்லவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு தொடர்பில் விசாரணை
அதன் போது குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.
மீண்டும் கைது செய்யப்பட்ட நபர்கள்
இதையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 653 பேர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 70 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.
காவல்துறையினர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
