இராணுவத் தலைமையகத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவல் - மோப்ப நாயிடம் சிக்கிய பொதி!
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்தே இந்த பொதி மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் கஞ்சா பொதிகள் இருப்பதாக தள்ளாடி இராணுவ தலைமையகத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து மதியம் 12 மணியளவில் குறித்த தனியார் பேருந்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பேருந்தில் கஞ்சா
இதன் போது குறித்த பேருந்தின் பின் ஆசனத்திற்கு கீழே காணப்பட்ட இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். இதன் போது குறித்த பொதியில் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 380 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு பொதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பேருந்தின் பின் இருக்கையில் இருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



